வெள்ளி, 23 செப்டம்பர், 2011

ஸ்பான்டிலோ

ஸ்பான்டிலோஸிஸ் மற்றும் ஸ்பான்டிலைடீஸ்


இவை இரண்டும் நாம் அடிக்கடி கேட்கும் வார்த்தைகள்”. ஸ்பான்டிலோ என்பது ஒரு கிரேக்க வார்த்தை இதன் பொருள் முள்ளியல் ஸ்பான்டிலோஸிஸ் முதுகெலும்பின் முள்ளியங்கள் (கழுத்து, மார்பு, இடுப்பு பகுதி) சீரழிவினால் ஏற்படும். முதுகெலும்பின் மேல் பாகத்தில் (கழுத்து பகுதியில்) ஏற்பட்டால் இது ‘செர்விகல் ஸ்பான்டிலோசிஸ்’ எனப்படும். முதுகெலும்பின் கீழ் பாக இடுப்பு பகுதி பாதிப்பு ‘லும்பார் ஸ்பான்டிலோஸிஸ்’ எனப்படுகிறது. ஸ்பான்டிலைடீஸ் முதுகெலும்பின் ஸினோவியல் மூட்டுகளின் அழற்சி, வீக்கம், ‘ஆங்கிலோஸிங் ஸ்பான்டிலைட்டீஸ்’ எனப்படும். இவற்றைப் பற்றி விவரமாக பார்ப்பதற்கு முன், முதுகெலும்பைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
முதுகெலும்பு
உலகின் பாரத்தை பலத்திலும், உருவத்திலும் பெரிய “அட்லாஸ்” என்பவன் தூக்கிக் கொண்டிருப்பதாக கிரேக்க புராணங்கள் கூறுகின்றன. அதே போல் உடலின் பாரத்தை சுமப்பது முதுகெலும்பு. இதனாலேயே நல்ல வலிமையாக நமது முதுகெலும்பு அமைந்திருக்கிறது. இது ஒரே எலும்பால் ஆனதல்ல. 26 சிறிய எலும்புகள் ஒன்று சேர்ந்து முதுகெலும்பை உருவாக்கி இருக்கின்றன. இவை ஒன்றன் மீது ஒன்றாக அமைந்த “முள்ளெலும்புகள்” 12, கீழ் முதுகில் 5, இடுப்பில் 5, குதத்தில் 4 ஆக, மொத்தம் 26 முள்ளெலும்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
சுஸ்ருதர் முதுகெலும்பை 30 எலும்புகள் கூடியது என்கிறார். (கழுத்து – 7, மேல் முதுகு – 12, நடு முதுகு – 5, கீழ் முதுகு – 5, குதம் – 1) தசைகளும், தசைநார்களும் இந்த எலும்புகளை இணைத்து வைக்கின்றன என்கிறார்.
முள்ளெலும்புகளின் அமைப்பு பிரத்யேகமானது. ஒவ்வொரு முள்ளெலும்பின் நடுவில் துவாரம் இருக்கிறது. ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருப்பதால், முதுகெலும்பு முழுவதும் நீண்ட, தொடர்ச்சியாக துவாரம் இருக்கும். இதன் உள் தான் நரம்பு நாளங்கள் வைக்கப்படுகின்றன. தண்டு வடம் நரம்பு நாளங்கள் மூளையிலிருந்து முதுகெலும்பின் உள்ள துவாரம் வழியே உடலில் பல இடங்களுக்கு செல்கின்றன. நரம்புகள், முள்ளெலும்புகளின் நடுவே உள்ள வெற்றிடங்கள் வழியே கிளைகள் போல பிரிகின்றன. சுற்றும் திடமான முள்ளெலும்புகளால் சூழப்பட்டு இருப்பதால், தண்டு வட நரம்புகள் பத்திரமாக இருக்கின்றன.
ஒன்றின் மேல் ஒன்றாக வைக்கப்பட்ட முள்ளெலும்புகளின் இடையே குருத்தெலும்பு வளையங்கள் (ஸ்பாஞ்ச் போல) “வாஷர்கள்” போல் அமைக்கப்பட்டிருப்பதால், உராய்வுகள் தடுக்கப்படுகின்றன. முதுகை திருப்பும் போதோ, உயரத்திலிருந்து குதிக்கும் போதோ பாதிப்பு ஏற்படாமல் இருப்பதும் இந்த குருத்தெலும்பு வளையங்களால் தான்.
முள்ளெலும்புகள் இருப்பிடத்தை விட்டு நகராமல் இருக்க தசை கட்டுகளால் கட்டப்பட்டுள்ளன. தசைகள் தசை நாண்களால் முள்ளெலும்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த தசைகளால் தான் நாம் முதுகை தேவையான போது, வளைக்க முடிகிறது.
முதுகெலும்பை மூன்று பிரிவுகளாக சொல்லலாம். மேல் கழுத்து பிரிவு மார்பறை பிரிவு கீழ்முதுகு, பிரிவு என்று அதாவது மேல் பிரிவு, நடுப்பிரிவு மற்றும் கீழ்ப்பகுதி என்று சொல்லலாம். அதிக பட்ச எடையை முதுகெலும்பின் கீழ்ப்பகுதி தான் சுமக்கிறது. எனவே கீழ்பகுதி எலும்பு, தசை, தசை நாண்கள் பாதிக்கப்பட்டால் வலி உண்டாகும். இரண்டு முள்ளெலும்புகள் நடுவே உள்ள வளையம் இடம் பெயர்ந்தால் அது ‘வளைய நழுவல்’ எனப்படும்.
முதுகெலும்பின் ஏற்படும் பாதிப்புகள்
முள்ளியங்களின் வின் நடுவே உள்ள வட்டத்தட்டுகள் பல பாதிப்புக்களுக்கு உள்ளாகின்றன. வட்டத்தட்டுக்களின் நடுவே, ஸ்பாஞ்ச் போன்ற மிருதுவான நியூக்லியஸ் உள்ளது. இதனால் நாம் நிற்கும் போது, நடக்கும் போது, ஓடும் போது ஏற்படும் அதிர்வுகளை தாங்கிக் கொள்கிறது. வட்டத்தட்டின் வெளி வளையம் ஆன்னுலஸ் எனப்படும். இது தான் வட்டத்தட்டுக்கு வடிவையும், உருவத்தையும், பலத்தையும் தருகிறது.
லத்தீன் மொழியில், ‘ஆன்னுலஸ்’ என்றால் வளையம் என்று பொருள் வட்டத்தட்டின் நடுவில் உள்ள நியூக்லியஸை பாதுகாக்க வெளி வளையம், வலை போன்ற நார்த்திசுக்களால் அமைந்துள்ளது.
வட்டத்தட்டின் கோளாறுகள்
வட்டத்தட்டின் சீரழிவு – வயதினால் ஏற்படும். அடிபடுதல், தொற்றுநோய்களால் இவைகளாலும் உண்டாகலாம்.
வட்டத்தட்டு இறக்கம் இதுவும், புடைத்துக் கொள்ளும் டிஸ்க், நழுவிய டிஸ்க், பிளவுபட்ட டிஸ்க், இடம் பெயர்ந்த டிஸ்க் எல்லாம் கிட்டத்தட்ட ஒன்று தான்.
ஆங்கிலோஸிங் ஸ்பான்டிலைட்டீஸ்
முதுகெலும்பு மற்றும் பெரிய மூட்டுக்களின் வீக்கம், இதனால் வரும் வலி, விறைப்பு ஆங்கிலோஸிஸ் ஸ்பான்டிலைட்டீஸ் எனப்படும். குறிப்பாக சொன்னால் முதுகெலும்பின் முள்ளியங்கள் இடையே ஏற்படும் உராய்வு, மற்றும் முதுகெலும்புடன், இடுப்பெலும்பு இணைந்த பகுதிகளில் உராய்வு, இதனால் இந்த இணைப்புகளின் வீக்கமும், வலியும் உண்டாகும். சுருக்கமாக முதுகெலும்பின் ஆர்த்தரைடீஸ் இந்த வியாதி. இதன் வேறு பெயர்கள் – ருமடாய்ட் ஸ்பான்டிலைட்டிஸ் அல்லது மேரி ஸ்ட்ரம்பெல் நோய். இந்த நோயின் முக்கிய அம்சம் முதுகெலும்பின் கீழே உள்ள முக்கோண வடிவ எலும்புத்தட்டு பாதிக்கப்படும். மூட்டுக்களில் ‘ஆஸ்டியோஃபட்’ உருவாகும். இவை ரோஜா செடியின் முள் போன்ற அமைப்பில் பாதிக்கப்பட்ட மூட்டுகளில் உருவாகும் எலும்பு வளர்ச்சி. மூட்டு அழற்சி மற்றும் வீக்கத்தால், எலும்பு முள்கள் ஒன்றோடொன்று இணைவது, இறுகி விடுவதை ‘ஆங்கிலோசிஸ்’ எனப்படும். இவையெல்லாம் ஆஸ்டியோ ஸ்பான்டிலைட்டீஸின் விளைவுகள்.
இந்த வகை மூட்டு வியாதியில் கை, மணிக்கட்டு, விரல்கள், கால் போன்ற ‘சிறிய’ மூட்டுக்கள் பாதிப்பது அபூர்வம்.
ஆங்கிலோசிஸ் ஸ்பான்டிலைடீஸ் பெண்களை விட 4 மடங்கு ஆண்களை பாதிக்கிறது. 20 வயதிலிருந்து 40 வயதுக்குள் பாதிக்கும். பரம்பரை வியாதி. பெற்றோருக்கு இருந்தால் பிள்ளைகளை தாக்கும் வாய்ப்புகள் 20 தடவை அதிகம்!
காரணங்கள்
மேற்சொன்னபடி பாரம்பரியம் தவிர வேறு காரணங்கள் தெரியவில்லை. வியாதியுள்ளவர்களிடம் ஒரு குறிப்பிட்ட மரபணு இருப்பது தெரிய வந்துள்ளது.
அறிகுறிகள்
1. முதல் முக்கிய அறிகுறி – முதுகு வலி, பகலை விட இரவில் அதிகமிருக்கும். முன்நோக்கி குனிந்தால் வலி குறைவது போலிருக்கும். ஆனால் இந்த மாதிரி வளைவதால், நிரந்தரமாக முதுகு வளைந்து விடலாம்.
2. முதுகெலும்பு கடினமாகி விறைப்பாக இருக்கும். காலைநேரத்தில் இந்த மாதிரி விறைப்பு ஏறிவிட்டு நேரமாக மறையும்.
3. பசியின்மை, எடை இழப்பு, களைப்பு, சோகை இவைகள் முதுகு வலியுடன் சேர்ந்து வரும்.
4. விலா எலும்புகள் பாதிக்கப்படுவதால், மார்பை விரித்து பெருமூச்சு விடுதல் வேதனை தரும்.
5. பெரிய மூட்டுக்களான தோள் பட்டை, முழங்கால், இடுப்பு இவற்றில் வலி ஆரம்பிக்கும்.
6. இந்த வியாதிக்கு ஆளாகும் மூன்றில் ஒருவருக்கு கண்கள் பாதிக்கப்படும். கண்பார்வை பாதிக்கப்படுவதில்லை.
இவ்வளவு அறிகுறிகள் இருந்தாலும் திரும்ப திரும்ப வரும் கீழ்பாக
முதுகெலும்பு வலி தான் இந்த நோயின் சாதாரண அறிகுறி. இந்த வலி புட்டப்பகுதிகளுக்கும் பரவும்.
சில ஆலோசனைகள்
1. பாதிக்கப்பட்ட மூட்டுகளுக்கு அதிக வேலை கொடுக்காமல் ஓய்வளிக்கவும்.
2. கடினமான மெத்தையில் படுக்க வேண்டாம். தலையணைகள் வேண்டாம். கால்களுக்கு தலையணை வைத்துக் கொள்வதும் கூடாது.
3. சுடுநீரில் குளிப்பது, ஐஸ் ஒத்தடம் வலியை குறைக்க உதவும்.
4. மிதமான உடற்பயிற்சி, நீச்சல், பிஸியோதெராபி பலனளிக்கும்.
5. எப்போதும் எல்லா வியாதிகளுக்கும் செல்லும் அறிவுரை – புகைப்பதை கைவிடவும்.
ஆங்கிலோஸிங் ஸ்பான்டிலைடீஸின் விளைவுகள்
• அங்கஸ்திதி, நிற்கும், உட்காரும் முறைகளை சரிவர செய்து வந்தாலே, பாதி வியாதி மறையும்.
• கவனிக்காமல் விட்டால் இந்த வகை ஸ்பான்டிலைடீஸ் முதுகெலும்பை விறப்படைய வைக்கும். இடுப்பு முழங்கால், தோள்கள் – இவற்றை தாக்கும்.
• முதுகெலும்பின் அடிப்பகுதியிலிருந்து வெளியேறும் “நரம்புக் கட்டுகள்” குதிரை வால் போலிருக்கும். இவை சீரழிந்த முதுகெலும்பின் உடைந்த டிஸ்குகளால் நசுக்கப்பட்டால் வலி உண்டாகும். இது ஒரு அபூர்வமான பாதிப்பு.
செர்விக்கல் ஸ்பான்டிலோஸிஸ்
வயதானவர்களை தாக்கும் பரவலான நோய் கழுத்தில வரும் ‘ஸ்பான்டிலோஸிஸ்’. முதுகுத்தண்டின் கழுத்துப் பகுதியில் முள்ளியங்களின் எலும்புகள் விபரீதமாக வளர்ச்சி அடையும். இவற்றின் இடையே உள்ள தகடு சிதைந்து போகும். இதனால் கழுத்துப் பிரதேச முதுகெலும்பு அழுத்தப்பட்டு வலியும் வேதனையும் ஏற்படும். இது தான் செர்விகல் ஸ்பான்டிலோஸிஸ் ‘செர்விகல்’ என்றால் கழுத்துப்பகுதி. இந்த நோயின் இதர பெயர்கள் – செர்விகல் ஆர்த்தரைடீஸ் செர்விகல் மைலோபதி மற்றும் செர்விகல் ஆஸ்டியோபைட்டீஸ் காரணங்கள்
• வயதால் பாதிக்கப்படும் மூட்டுகள் – குறிப்பாக முதுகெலும்பு
• சரியாக நிற்பது, உட்காருவது இல்லாமல், உடலை வளைத்து, நெளிந்து கோணலாக நிற்பது, ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து இருப்பது. உதாரணம் – கம்ப்யூட்டர் வேலை, டைப் அடிப்பது, படுக்கும் போது அதிக தலையணைகளை உபயோகிப்பது.
அறிகுறிகள்
1. கழுத்துவலி – இடது, வலது பக்கம் திரும்ப முடியாமல் ஏற்படும் வலி. இந்த வலி தோள்பட்டை, கைகளுக்கும் பரவலாம். மார்பு, நெற்றிக்கு கூட வலி பரவலாம்.
2. தீவிர நிலையில் தலைசுற்றல், கை கால் மரத்துப் போதல் இவை ஏற்படலாம்.
3. முதுகெலும்பு நசுக்கப்பட்டால், அது பாதுகாக்கும் நரம்புகளும் அழுத்தப்படும். இதனால் கை கால்களில் குறுகுறுப்பு (உறுத்தம்) தெரியும்.
4. தொடரும் கழுத்துவலி.
5. காதில் இரைச்சல், மயக்கம் இவை ஏற்படலாம்.
பொதுவான சிகிச்சைகள்
• பிஸியோ – தெரபி மூலம் கழுத்திற்கு பயிற்சியளித்தல்
• ‘டிராக்ஷன்’
• கழுத்தில் “காலர்” மாட்டுதல்
• கண்கள் பலவீனம், மலஜலங்களை கட்டுப்படுத்த முடியாமற் போனால் உடனே வைத்தியரை அணுகவும்.
ஆயுர்வேத சிகிச்சைகள்
1. வேப்பம் பூ மற்றும் இலைகளை சிறிதளவு எடுத்து தினமும் சாப்பிட்டு வரவும்.
2. வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடலாம்.
3. கர்ப்பூரம் சேர்த்த எண்ணையால் கழுத்தை மசாஜ் செய்யவும்.
4. அரிசி, மைதா, சூஜி (ரவை) – இவற்றை தவிர்த்து, கோதுமை உணவை அதிகமாக்கவும்.
5. குளிர், பனி, உடலை தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
6. புளி, தயிர் போன்ற புளிப்பான ஆகாரத்தை தவிர்க்கவும்.
ஆயுர்வேத மருந்துகள்
உள்ளுக்கு கொடுக்க
1. சிம்ஹானந்த குக்குலு (பால் (அ) சுடுநீருடன்)
2. புனர்நவாதி குக்குலு
3. மகா யோக ராஜ குக்குலு
4. மஹாரஸ்னாதி க்வாத்
மசாஜ் செய்ய தைலங்கள்
1. மகாவிஷ்கர்ப தைலம்
2. மஹாநாராயண தைலம்
யோகாசனங்கள்
மூட்டு கோளாறுகளுக்கு யோகாசனம் நல்ல சிகிச்சை. திரிகோணாசனம், புஜங்காஸனம், சக்கராஸனா, எல்லா வகை நிற்கும் ஆசனங்கள் நிவாரணமளிக்கும்.
இடுப்பு வலி
எப்போது மனிதன் நான்கு கால்களால் நடப்பதை விட்டு, இரண்டு கால்களால் நடக்க ஆரம்பித்தானோ, அப்போதே கூடவே இடுப்பு வலியும் தோன்றிருக்க வேண்டும். இடுப்பு வலி ஏழை, பணக்காரர் என்ற வித்யாசங்களையும் பார்ப்பதில்லை.
முதுகெலும்பின் கீழ்பகுதி லூம்பார் எனப்படுகிறது. இந்த கீழ்முதுகு வலி இடைவிடாமல் அல்லது அடிக்கடி தோன்றி, இடுப்பு, தொடைகள் வரை பரவி, தொல்லைப்படுத்தும். திடீரென்று ஏற்படும் இந்த வலியால் முதுகை வளைக்கவும், திருப்பவும் முடியாமல் போகும். வலியும் வேதனையும் அதிகமாக இருக்கும்.
இடுப்பு வலி ஐந்து பேரில் 4 பேருக்கு வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த வலி தாக்கும். வயதாக, வயதாக, இதன் தாக்குதல் அதிகமாகும்.
காரணங்கள்
• தசை நாண்கள், நார்கள் அளவுக்கு மீறி இழுபடுதல், சுளுக்கு இவற்றால் பாதிக்கப்பட்டால் இடுப்பு வலி ஏற்படலாம். கனமானவற்றை தூக்குவது மட்டுமல்ல, தவறாக தூக்குவது.
• முதுகெலும்பின் இரண்டு முள்ளியங்களுக்கிடையே உள்ள “குஷன்” போன்ற டிஸ்குகள் உடைந்து போய் அவற்றினுள் இருக்கும் ஜெல்லி போன்ற பொருள் வெளிவருகிறது. இது நரம்புகளின் மேல் அழுத்தி, தாங்கமுடியாத வலியைத் தரும்.
• அதீத உடற்பயிற்சியாலும், அதே சமயம் உடற்பயிற்சி, உடலுழைப்பே இல்லாமல் போனாலும், இடுப்பு வலி வரும்.
• ஆஸ்டியோ – ஆர்த்தரைடீஸ் நோயாலும் இந்த வலி வரலாம்.
• அதிகமான உடல் எடை.
• ஆஸ்டியோ – பொரோசிஸ்ஸ§ம் இடுப்பு வலியை உண்டாக்கும்.
• வயதானவர்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி, முதுகெலும்பின் தண்டுவடத்தில் உள்ள நரம்புகளை கொண்டு செல்லும் “பாதை” சுருங்கி விடுவதால் ஏற்படும்.
• உடலின் வேறு பாகங்களில் ஏற்படும் பாதிப்பு (உதாரணம் – சிறுநீரகம், சிறுநீர்பை, கர்பப்பையை) இடுப்பு வலியை தோற்றுவிக்கும்.
• புகை பிடிப்பது.
• தவறான காலணிகள்
• தவறான நிற்கும் முறை, அங்கஸ்திதி.
அறிகுறிகள்
• தொடர்ச்சியாக அல்லது விட்டு விட்டு வலி.
• நடந்தால், குனிந்து நிமிர்ந்தால், நின்றால் வலி ஏற்படுவது.
• கைகள், தோள்பட்டையில் பரவும் கழுத்துவலி.
ஆயுர்வேத தீர்வுகள்
ஆயுர்வேதம் சுட்டிக்காட்டும் காரணங்கள் – வாததோஷம், வாதத்தை தூண்டும் உணவுகள், அஜீரணம், முதலியன. உண்ட உணவு சரியாக செரிமானம் ஆகாமல் உடலில் தேங்கி நின்று நச்சுப் பொருளாக மாறும். இதனால் வாதம் அதிகமாகி பாதிக்கப்பட்ட இடங்களில் வலி ஏற்படும். ஆயுர்வேத சிகிச்சை தோஷங்களை சமச்சீர் ஆக்கும் குறிக்கோளுடன் தொடங்கும்.
• ‘ஆமா’ (விஷப்பொருட்கள்) வை நீக்க, நோயாளி பட்டினி (குறுகிய காலத்திற்கு) இருக்க வேண்டும். பிறகும் நோயாளி பத்திய உணவை கடைப்பிடிக்க வேண்டும். பேதி மருந்துகளால் (பொதுவாக விளக்கெண்ணையால்) வயிறு சுத்தப்படுத்தப்படும்.
• மன அழுத்தம் குறைய நோயாளி அமைதிப்படுத்தப்படுவார்.
• தீவிரமான வலியிருந்தால் நோயாளி, படுக்கை – ஓய்வு, ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த ஒய்வின் போது சில மணிகளுக்கு ஒரு முறை, நடக்க வேண்டும். இதனால் ரத்த ஒட்டம் தடைபடாமல் இருக்கும்.
• சூடு ஒத்தடம் பலனளிக்கும்.
• நாராயண தைலத்தால் மசாஜ் செய்வது
• நீராவியை உபயோகித்து நோயாளியின் உடலிலிருந்து வியர்வை மூலமாக கெடுதியளிக்கும் பொருள்கள் நீக்கப்படும். தேவைப்பட்டால் ‘பஞ்சகர்மா’ சிகிச்சையின் அங்கமான ஸ்வேதனா முதலியன கையாளப்படும்.
• பிறகு தசைகள் வலுப்பெற சிகிச்சை, மருந்துகள் தரப்படும்.
• கடி வஸ்தி (மூலிகை மசாஜ், தைலத்தை முதுகின் கீழ்பாகத்தில் தேக்கி வைத்தல்) மற்றும் நவரக் கிழி (நவர அரிசியை பாலில் சமைத்து அத்துடன் மூலிகை கஷாயங்களை சேர்த்து ஒரு பருத்தி துணியில் கட்டி ஒத்தடம் கொடுப்பது) சிகிச்சைகளும் தசைவலிகளை போக்கி நிவாரணமளிக்கும்.
வீட்டு வைத்தியம்
• பூண்டு இடுப்பு வலியை குறைக்கும். இரண்டு பூண்டு “பற்களை” கசக்கி (வெளித்தோலையும், உட்காம்பையும் எடுத்து விட்டு), ஒரு டம்ளர் பாலில் போட்டு காய்ச்சவும். பால் பாதியாக சுண்டியதும் இறக்கி, வடிகட்டி, பாதியாக பிரித்து, ஒரு பாதியை காலையிலும், மற்றொரு பாதியை மாலையிலும் பருகலாம். 3 மாதம் வரை இதை செய்யவும்.
• ஐந்தாறு பூண்டு ‘பல்களை’ 60 மி.லி. எண்ணையில் இட்டு காய்ச்சவும். எண்ணை நல்லெண்ணை (அ) கடுகு எண்ணை (அ) தேங்காய் எண்ணை இவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம். 20 நிமிடம் கொதிக்க விட்டு, இறக்கி, வடிகட்டி மிதமான சூட்டில் முதுகில் பாதிக்கப்பட்ட இடத்தில் 10 நிமிடம் மெதுவாக மசாஜ் செய்யவும் இதை 15 நாட்கள் செய்ய வேண்டும்.
• வெற்றிலையை சாறாக பிழிந்து, அந்த சாற்றுடன் தேங்காய் எண்ணை கலந்து தடவலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக